
ஹைதராபாத்: மே 19 –
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்ற இரு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்.. அவர்களின் திட்டம் என்ன உள்ளிட்டவை குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. அதில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகவே இந்திய பாதுகாப்புப் படை ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது.
அதேநேரம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுக்க மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என உளவுத் துறை எச்சரிக்கை அளித்திருந்தது. இதனால் பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியிருந்தனர். இதற்கிடையே தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பயங்கரவாத முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச போலீசாருடன் இணைந்து தெலுங்கானா போலீசார் நடத்திய இந்த ஆபரேஷனில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு வைக்கத் தீவிரவாதிகள் போட்டிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.. மேலும், ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி விஜயநகரத்தைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகிய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவர் கைது இதற்காக விஜயநகரத்தில் இருந்து சிராஜ் வெடிபொருட்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட ஒரு ஐஎஸ்ஐஎஸ் பிரிவிடம் இருந்து இவர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் ஹைதராபாத்தில் வெடிகுண்டுகளை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பயங்கரவாதிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா புலனாய்வு போலீசாரும் மற்றும் ஆந்திரப் பிரதேச புலனாய்வு போலீசாரும் இணைந்து இந்த அதிரடி ஆபரேஷனை நடத்தியுள்ளனர்.