Home செய்திகள் தேசிய செய்திகள் அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!

அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!

குவஹாட்டி: மே 4-
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 64 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சி ஆட்சியை பிடிக்கும் எனும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்தது. முதல்வராக சர்பானந்த சோனாவால் பொறுப்பேற்றார். இதையடுத்து, அக்கட்சியின் ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராக பொறுப்பேற்றார். தற்போதைய தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.