
கோவை: நவ. 12-
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் கோவையில் சிவானந்தாகாலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கரூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்றும் நாம் காட்ட வேண்டும் என்றும், கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் கூறினார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அந்த வகையில் SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட், ஆதிஇந்திய தேசிய லீக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் SIRயை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, “SIR குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் தான். IT, ED போன்றவற்றை கொண்டு வந்து அடக்கு முறையை முன்னெடுத்தார்கள். ஆனால் தோல்வியை தழுவியதால் தற்போது இந்த SIR மூலம் அடக்கு முறையை முன்னெடுக்கிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் ஏன் அவசரமாக இதனை முன்னெடுத்தார்கள். இதற்கு இந்த காலம் போதாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும்.. அப்படி இருந்தும் அதனை செய்கிறார்கள்.. பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதனை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் . அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க எதிர்க்கிறது. பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசு, மீண்டும் வென்று விட கூடாது என நினைத்து இவற்றையெல்லாம் செய்கிறது.
அதிமுகவில் கண்னை மூடி கொண்டு எடப்பாடி பழனிசாமி SIR யை ஆதரிக்கிறார், அதிமுகவிற்கு இது தான் இறுதி தேர்தல் என்பதை நாம் செய்து காட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தை பாஜக கையில் வைத்துள்ளது. 2026ல் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விட கூடாது. கோவையில் அவினாசி மேம்பாலத்தை திறந்து வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னும் பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா என பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறார். கோவையில் வரலாறு காண வளர்ச்சியை இங்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமலேயே முதல்வர் கொண்டு வந்துள்ளார். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து SIR முறியடிப்போம்” இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.















