அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஜூன் 20 –
இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.
அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட்டு,சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்கா திரைமறைவில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கேஇடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, ஆஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினார். ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்” என்று தெரிவித்தார். இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது. புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. அந்த வகையில் சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் மென்மையான போக்கை பின்பற்றி வருகின்றன. ஈரான் ஆதரவு நாடுகள்: ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் களமிறங்கும். இஸ்ரேல் மீது பாகிஸ்தான் ராணுவம் அணு குண்டுகளை வீசும் என்று ஈரான் ராணுவ மூத்த அதிகாரி மோசென் ரீஸி அண்மையில் கூறினார்.