
தெஹ்ரான்: ஜூன் 23-
நேற்று அதிகாலை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் மூன்றும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், மிக முக்கியமான அணு ஆய்வு மையமாக கருதப்படும் ‘ஃபோர்டோ’ சேதமடைந்துள்ளதே தவிர, அழிக்கப்படவில்லை என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி ஊடகம் கூறியிருக்கிறது. அதாவது அமெரிக்காவின் தாக்குதலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேல் அதிகாரிகள், இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவின் தாக்குதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான்.
ஆனால், ஃபோர்டோ முழுமையாக அழிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. அதேபோல பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி, “ஃபோர்டோ தளத்தை அமெரிக்கா முழுமையாக அழிக்கவில்லை. 12 குண்டுகளால் கூட அதை முழுமையாக அழிக்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறது.
ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கிறது. எனவே, நாங்கள் அதை தடுக்கிறோம் என்று சொல்லி, ஈரானின் அணு நிலைகள் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஈரானில் மொத்தம் மூன்று முக்கியமான அணு நிலையங்கள் இருக்கின்றன. 1. ஃபோர்டோ 2. நடான்ஸ் 3. இஸ்ஃபஹான் இவை அனைத்தும் மலையை குடைந்து அதற்கு உள்ளே கட்டப்பட்டிருக்கின்றன.
எனவே இதனை எளிதில் தாக்கி அழிக்க முடியாது. அந்த வகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதல், இஸ்ரேலுக்குள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் சில பாதிப்புகளை சந்தித்தது.
இந்த சண்டை டந்துக்கொண்டிருக்கும்போதுதான், அமெரிக்கா உள்ளே நுழைந்தது. அந்நாட்டின் மிகவும் ஆபத்தான வெடிகுண்டாக கருதப்படும் GBU-57 குண்டை பயன்படுத்தி ஈரானின் அணு உலைகள் அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.
இந்த குண்டு, நிலத்திற்கு அடியில் பல அடி ஆழத்தில் உள்ள இலக்குகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. மட்டுமல்லாது இந்த குண்டை B-2 ரக விமானத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.