
பெங்களூரு: ஜூன் 25-
கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்டுவதற்கு மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்டு வசதி ஆணையத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.அதிகாரிகள் அத்தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்கிறார்கள். ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு மனையை ஒதுக்குகிறார்கள். எனது தொகுதியில் 900 பேருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது‘’என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனது துறையில் ஊழல் நடப்பதாக கூறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என கூற வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் வாங்கினாரா? யாரேனும் அதிகாரிகள் வாங்கினார்களா? அமைச்சர் வாங்கினாரா? என தெளிவாக கூற வேண்டும்.
இந்த விவகாரத்தில் எத்தகைய விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் லஞ்சம் வாங்கியதாக யாரேனும் நிரூபித்தால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.