
சென்னை: மே 27 –
அரக்கோணம் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகர் தெய்வச்செயலை திமுக ஏன் காத்து நிற்கிறது? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் கேள்விகள் ஓயாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்படுகிறதா? அப்படியெனில் யார் அந்த SIR? திமுக குற்றவாளிக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்துகிறது. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்? ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக.”
மாணவி மிரட்டல் குற்றச்சாட்டு “பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையால் மிரட்டப்படுவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது. திமுக பிரமுகர் தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றி, பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்தியுள்ளார். இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது.”
துப்பாக்கி வழக்கு இணைப்பு “திமுக கவுன்சிலரிடம் நவீன துப்பாக்கி எப்படி வந்தது? அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதைத்தான் ஸ்டாலின் மாடல் என்கிறேன்.” அலங்கோல ஆட்சி குற்றச்சாட்டு “அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு மு.க.ஸ்டாலின்-க்கு கோபம் வருகிறது? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக்கொண்டிருப்பதற்கு ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.”
மக்களுக்கு எச்சரிக்கை “இந்த ஆட்சி முடியும் வரை மக்களே தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக திமுகவினரிடம் இருந்து. இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை, ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகிறது.” இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.