அலங்காரத்திரை அவலங்களை மறைக்குமா?

சென்னை: ஜூன் 24-தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் அலங்காரத் துணி கொண்டு மறைத்திருந்த சம்பவம் அப்போதே விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோன்று, சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது, ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் இருப்பதையும், மறுபுறம் குடிசைகள் இருப்பதையும் மறைக்கும் வகையில் அலங்காரத் திரை அமைக்கப்பட்டுள்ளது.சுத்தம், சுகாதாரமற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் கால்வாயும், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று திரையிட்டு மறைப்பது என்ன நியாயம்?
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல்முறை பதவி வகித்தபோது, அகமதாபாத்தில் 2020-ல் ‘ஹவுடி ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபரின் கண்களில் அங்குள்ள குடிசைப்பகுதிகள் பட்டுவிடக் கூடாது என்பதற்காக வழியெங்கும் இருந்தஅகமதாபாத் குடிசைப் பகுதிகளை 7 அடிக்கு சுவர் அமைத்துவண்ணம் தீட்டி மறைத்திருந்தனர்.