
வாஷிங்டன், அக். 21-“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.எனினும் போர் நிறுத்தம் தொடங்கியபிறகும் ஹமாஸ் – இஸ்ரேல் படைகளுக்கு இடையே காசாவில் தொடர் மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால், நாங்கள் உள்ளே சென்று சரி செய்ய வேண்டி இருக்கும். அது மிக விரைவாகவும் மிகவும் வன்முறையான முறையிலும் நடக்கும். நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே சென்றுவிடுவார்கள்.என்னால் அவர்களிடம், ‘உள்ளே போய் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது, நாங்கள் அதைச் சொல்லவில்லை. நாங்கள் ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.