
கொழும்பு, பிப். 17- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பயமில்லாமல் விளையாடிய இஷான் கிஷன் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளர். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 176 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் 40 பந்துகளில், 77 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அவர், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு வியூகத்தை தகர்த்தெறிந்தார். ஏனெனில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சை கொண்டு வீசியிருந்தது. இஷான் கிஷன் சுழற்பந்து வீச்சில் மட்டும் 37 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்களை விளாசியிருந்தார். போட்டி முடிவடைந்ததும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெசன் கூறியதாவது: இஷான் கிஷன் பயமற்றவர் என்று நான் நினைக்கிறேன். அவரால் மைதானத்தின் இருபுறமும் பந்துகளை அடிக்க முடிந்தது. லெக் திசையில் மட்டும் விளையாடக்கூடிய நபராக அவர், இல்லை. லெக் திசையில் பந்துகளை விளாசுவதில் இஷான் கிஷன் நம்பமுடியாத அளவுக்கு வலிமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர், அதை தலைகீழாக மாற்றினார். பவர்பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக திகழ்ந்தார். இஷான் கிஷனின் பார்ம், எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய அழுத்தத்தை கொடுத்தது. அடிப்படை விஷயங்களில் இருந்து எங்களது சுழற்பந்து வீச்சாளர்களை விலக்கி வைத்தது. நாங்கள் நன்றாகவும் மெதுவாகவும் பந்து வீசும்போது ஆடுகளம் உண்மையில் உதவியாக இருந்தது. இஷான் கிஷனை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பந்துகளுக்கு நிகராகவே ரன்கள் எடுத்தனர். இதில் ஷிவம் துபே சற்று சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் அது கடினமாகவே இருந்தது. இஷான் கிஷன் விளையாடிய விதம் நிச்சயமாக முழு போட்டியிலும் ஒரு தனிச்சிறப்பாக இருந்தது. அவர், விளையாடிய விதம் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தது. இவ்வாறு மைக் ஹெசன் கூறினார்


















