
பெங்களூரு, ஜன. 17- 2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஆர்சிபி. இந்த வெற்றியின் கதாநாயகியாக ஜொலித்தவர் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாங்கா பாட்டீல். இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைத் தனது சுழற்பந்து வீச்சால் நிலைகுலையச் செய்த ஸ்ரேயாங்கா பாட்டீல், 4 ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் WPL வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளம் வயது வீராங்கனை (23 வயது மற்றும் 169 நாட்கள்) என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். பெத் மூனி, கனிகா அஹுஜா போன்ற முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. முன்னதாக டாஸ் இழந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்மிருதி மந்தனா, கிரேஸ் ஹாரிஸ் போன்ற நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 6 ஓவர்களுக்குள் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தத்தளித்தது. அப்போது களத்தில் இணைந்த ராதா யாதவ் மற்றும் ரிச்சா கோஷ் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. குறிப்பாக ராதா யாதவ் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரிச்சா கோஷ் அவருக்குத் துணையாக நிற்க, இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 105 ரன்களைக் குவித்தது. இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 182/7 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு பெத் மூனி (27) அதிரடி துவக்கம் கொடுத்தாலும், ஸ்ரேயாங்கா பாட்டீல் அவரை எல்பிடபிள்யூ (LBW) முறையில் வெளியேற்றினார். பாரதி ஃபுல்மாலி மட்டும் தனி ஆளாகப் போராடி 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, குஜராத் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


















