
டெல்லி, ஜூன் 20- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக (சுமார் ரூ.37,600 கோடி) உயர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கைகளில் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் சுவிஸ் வங்கிகளுக்கு எப்போதும் தனித்துவம் இருக்கிறது. ஏனென்றால் சுவிஸ் வங்கிகள் எப்போதும் தனது வாடிக்கையாளர்களின் பெயர்களை யார் உடனும் பகிர்ந்து கொள்ளாது. இதனால் சர்வதேச அளவில் பலரும் சுவில் வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்தியாவிலும் கூட அதுபோல பல கோடீஸ்வரர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தை வைத்துள்ளனர். சுவிஸ் வங்கிகள் பொதுவாகவே நமது நாட்டில் சுவிஸ் வங்கிகள் வைத்திருக்கும் பணம் கறுப்புப் பணம் என்றே நினைப்பார்கள். கடந்த பல ஆண்டுகளாக இதை வைத்து நமது நாட்டில் அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி தனது வருடாந்திர ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் எவ்வளவு பணம் வைத்துள்ளனர் என்பது குறித்த டேட்டாவும் இடம்பெற்றிருக்கிறது. மூன்று மடங்கு உயர்வு அதில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளை இந்தியர்கள் (சுமார் ரூ.37,600 கோடி) டெபாசிட் செய்து வைத்துள்ளனர். அதேநேரம் நேரடியாக இந்திய வாடிக்கையாளர்கள், அதாவது தனி நபர்கள் பெயரில் உள்ள பணம் இந்திய மதிப்பில் ரூ.3675 கோடியாக மட்டுமே உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யும் தொகை மிகக் கடுமையாகக் குறைந்து, 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக சரிந்தது. இதன் காரணமாகவே இப்போது அது பல மடங்கு அதிகரித்தது போலத் தோற்றமளிக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் கிட்டதட்ட அதே நிலையை அடைந்துள்ளது. அதேநேரம் இவை அங்குள்ள உள்ளூர் வங்கிகள் சுவிஸ் தேசிய வங்கிக்கு அளித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆகும். இதில் இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் போலி நிறுவனங்கள் அல்லது ஷேல் கார்பரேஷன் மூலம் வைத்திருக்கும் பணம் கணக்கில் வராது.