இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு – காங்கிரஸ் சாடல்

புதுடெல்லி: ஜூன் 12-
பயங்கரவாதிகளை எதிர்க்க பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதாக அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ள நிலையில், தங்கள் நாட்டு ராணுவ தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனிருக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது இந்திய வெளியுறவுத்துறை கொள்கையின் தோல்வி என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் மறுபுறம், பயங்கரவாதிகளை பாகிஸ்தான் சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக அமெரிக்கா புகழாரம் சூட்டியிருக்கிறது. மட்டுமல்லாது மிக முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது.
வாஷிங்டன் டிசியில் உள்ள, அமெரிக்க செனட் ஆயுத சேவைகள் குழுவின் முன் அந்நாட்டு ராணுவத்தின் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா அறிக்கை ஒன்றை நேற்று சமர்பித்திருந்தார். அப்போது பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே பயங்கரவாதிகளை வேட்டையாடியதற்காக பாகிஸ்தான் இராணுவத்தை நான் பாராட்டுகிறேன். அவர்கள் இப்போது தீவிர பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு உலகில் அவர்கள் ஒரு தனித்துவமான கூட்டாளியாக மாறி வருகின்றனர். நான் ஏன் அப்படி சொல்கிறேன் எனில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி, ஆபகானிஸ்தான் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அபே கேட்டில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட, 169 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சதி திட்டத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-கே எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதி முகமது ஷரிபுல்லா மூளையாக செயல்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்திருக்கிறது.