டெல்லி: அக்.24- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் செல்வதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இரு நாடுகளும் நியாயமான மற்றும் சமமான ஒரு உடன்பாட்டை விரைவில் எட்டுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய அதிகாரிகளின் குழு, அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றிருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் அக்டோபர் 17 அன்று முடிவடைந்தன. இதனையடுத்து பியூஷ் கோயல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ”நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அண்மையில், வர்த்தகத்துறை செயலாளர் அமெரிக்காவுக்குச் சென்று தனது சகாக்களை சந்தித்தார். நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம், பேச்சுவார்த்தை முன்னேற்ற பாதையில் செல்கிறது. விரைவில் நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை எட்டுவோம் என நம்புகிறோம்” என்று கோயல் ூறியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்கள் ஒரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 2025 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திற்குள் (அக்டோபர்-நவம்பர்) ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளனர். இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. கடந்த மாதம், வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக பியூஷ் கோயல், நியூயார்க்கிற்கு ஒரு குழுவுடன் சென்றிருந்தார். டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களின் மீது 50% வரியை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இரு தரப்பிலும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதுள்ள 191 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2024-25 ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது, இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 18%, இறக்குமதியில் 6.22% மற்றும் நாட்டின் மொத்த சரக்கு வர்த்தகத்தில் 10.73% ஆகும். வர்த்தக அமைச்சகத் தரவுகளின்படி, வாஷிங்டன் விதித்த அதிக வரிகளால் செப்டம்பரில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 11.93% குறைந்து 5.46 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதி 11.78% அதிகரித்து 3.98 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.















