இந்தியா – ஓமன் நாட்டு உறவுகளை பிரதிபலிக்கும் வரவேற்பு: மோடி பெருமிதம்

ஓமன்: டிச.18-
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார்.
தற்போது எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்-ஐ சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஓமனில் கிடைத்த இந்த அன்பான வரவேற்பிற்கு நன்றி. இங்குள்ள இந்திய சமூகத்தினரின் பாசமும் உற்சாகமும், இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையிலான மக்கள் உறவுகளை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ” இந்த ஒப்பந்தம் வாயிலாக ஜவுளி, காலணி, ஆட்டோ மொபைல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.