
புதுடெல்லி: பிப்ரவரி 27-
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது மிக வேகமாக ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட பணிகளில் ஒருங்கிணைத்து வருகின்றன. தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான சேவைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்த்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் இந்திய ஐடி ஊழியர்களுக்கும் பெரிய சவாலாக உருவாகியிருக்கிறது.
ஒருபுறம் ஏஐ தொழில்நுட்பம் ஒவ்வொரு நொடியும் தன்னை அப்டேட் செய்து கொண்டு தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டு வருகிறது. அதற்கு நிகராக தற்போது ஐடி துறையில் வேலை செய்து வரக்கூடிய ஊழியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களுடைய வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன.இந்த நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பம் குறித்து இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான நாராயணமூர்த்தி மிக முக்கியமான ஒரு கருத்தினை பகிர்ந்து இருக்கிறார். நாராயணமூர்த்தியை பொருத்தவரை இந்தியா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் இளைஞர்கள் வாரத்திற்கு குறைந்தது 70 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் என கூறி பெரிய சர்ச்சையில் சிக்கியவர். தொடர்ந்து தன்னுடைய கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அவருடைய இந்த பேச்சுக்கு பல வழிகளில் எதிர்ப்பு கிளம்பிய போதும் தன்னுடைய கருத்தினை அவர் பின்வாங்கவில்லை. இந்த சூழலில் ஏஐ குறித்து அவர் மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஏஐ கண்டு இளைஞர்கள் அச்சமடைய கூடாது அதற்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.















