
வாஷிங்டன்: ஜூன் 12-
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் என்ற முறையில், இன்று ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.
இந்த விவாதங்களும் இறுதிப் புள்ளிகளும், அடிப்படைக் கருத்துருவிலும் சரி, மிக விரிவான விவரங்களிலும் சரி, இதில் தொடர்புடைய அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமும் இன்றி முழு வீச்சில் தொடரும். இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையிலும் சர்வதேச அரசியல் அரங்கிலும் நிலவி வந்த போர் அச்சத்தை சற்றே தணித்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்து சென்ற அமெரிக்காவின் அபாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் தீவு பகுதிகளில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்கள் மீது அமெரிக்கப்படை குண்டு வீசியது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான், பந்தர் அப்பாஸ் துறைமுக நகரம், மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நேற்று காலை 2-வது நாளாக தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவலை ஈரான் வெளியிடவில்லை. இதற்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் குவைத் வான்வெளி நேற்று பல மணி நேரம் மூடப்பட்டது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதனால் யாரும் பாதிப்படையவில்லை.


















