உத்தவ் தாக்கரே பைகள் சோதனை வழக்கமானது: தேர்தல் ஆணையம் தகவல்

மும்பை, நவ. 13- மகாராஷ்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் உத்தவ் தாக்கரேவின் பைகள் கடந்த 2 நாட்களில் 2 முறை சோதனை செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவர்களின் பைகள் இதுபோன்று சோதனை செய்யப்படுகின்றனவா என அறிய விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக குறிவைக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்” என்றார்.இப்புகார் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரேவின் பைகள் சோதனையிடப்பட்டன. இது வழக்கமான நடைமுறை. வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றுகின்றனர்” என்று தெரிவித்தன.