புதுடெல்லி: ஆகஸ்ட் 18- டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு பொருட்களை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தலைநகர் டெல்லியின் சிவமூர்த்தி பகுதியில் இருந்து ஹரியானாவின் குருகிராம் வரை 29 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இதில் ஹரியானாவுக்கு உட்பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்லைக்கு உட்பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. துவாரகா நெடுஞ்சாலை என்றழைக்கப்படும் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.இதேபோல டெல்லியின் அலிப்பூர் முதல் டிச்சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடியில் நகர்ப்புற விரிவாக்க சாலை அமைக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் 3-வது ரிங் சாலை என்றழைக்கப்படும் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். டெல்லி ரோஹினி பகுதியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: டெல்லியின் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிதாக திறக்கப்பட்டிருக்கும் இரு நெடுஞ்சாலைகளால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். டெல்லி மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது.
விரைவில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே நீங்கள் விற்பனை செய்ய வேண்டும். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதேபோல நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.














