
அகமதாபாத்:ஜூன் 4- நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், பட்டம் வென்றது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
அப்போது அவர் தெரிவித்தது: “இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியம். இதற்காக 18 வருடங்கள் காத்திருந்தோம். இந்த அணிகக்க எனது இளமை, ஃப்ரைம் ஃபார்ம் மற்றும் அனுபவத்தை தந்துள்ளேன். என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துள்ளேன். இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்து வீசியவுடன் மிகவும் உணர்ச்சி வசமானேன்.
ஆர்சிபி அணிக்காக டிவில்லியர்ஸ் நிறைய செய்திருக்கிறார். அதனால் இந்த ஆட்டத்துக்கு முன்பு, வெற்றியில் நீங்களும் இருக்க வேண்டும் என சொன்னேன். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் இந்த அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்றது அவர் தான். அவர் எங்களுடன் வெற்றி மேடையில் இருப்பார்.
நான் இந்த அணிக்கு விசுவாசமானவனாக உள்ளேன். அது எதுவாக இருந்தாலும் சரி. நான் வேறுவிதமாக நினைத்த தருணங்களும் இருந்தது உண்டு. ஆனால், நான் இந்த அணியிலேயே இருந்தேன். என் இதயம் பெங்களூரு உடன் உள்ளது, என் ஆன்மா பெங்களூரு உடன் உள்ளது. நான் ஐபிஎல் விளையாடும் வரை அது என்றென்றும் ஆர்சிபி அணிக்காகத்தான் விளையாடுவேன்.
இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல தூங்குவேன். இறுதியாக என் மடியில் ஐபிஎல் கோப்பையை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
அணியின் நிர்வாகமும், குழுவும் சிறப்பானது. ஏலத்தின் போது எங்களை நோக்கி கேள்விகள் இருந்தது. அதை அடுத்த நாளில் சரி செய்தோம். இந்த தருணம் என் கரியரில் சிறந்த தருணங்களில் ஒன்று. இருந்தாலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஐந்து ரேங்க் பின்தங்கி உள்ளது. எல்லோரிடத்திலும் மதிப்பை பெற வேண்டுமென்றால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்வு செய்ய வேண்டும்” என கோலி தெரிவித்தார்.
இது 18-வது ஐபிஎல் சீசன். கோலியின் ஜெர்ஸி நம்பரும் 18. அந்த வகையில் அந்த இரண்டும் சேர்ந்து கோலிக்கு இப்போது ஐபிஎல் சாம்பியன் என்று அடையாளத்தை வழங்கியுள்ளது.