‘ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது’: பலாத்கார வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி, மே 29- டில்லியில், பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைதான சமூக வலைத்தள பிரபலத்துக்கு, இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது எனவும் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை அல்ல’ எனவும் கருத்து தெரிவித்தது.டில்லியைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலம், 23, மீது, துணிக்கடை நடத்தும் பெண், 40, பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: கடந்த, 2021ல் சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்திடம், என் ஆடை வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யுமாறு கேட்டேன். விளம்பரம் தயாரிக்க, ‘ஐ போன்’ தேவை என கேட்டதால், ஜம்முவில் உள்ள ‘ஆப்பிள் ஸ்டோர்’ வாயிலாக, ‘ஐ போன்’ வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அந்த போனை விற்க முயன்றதால் பிரச்னை ஏற்பட்டது. இதனால், என்னிடம் மன்னிப்பு கேட்டு 20,000 ரூபாயை தந்தார். பின்னர், டில்லி கன்னாட் பிளேஸ் பகுதிக்கு என்னை அழைத்த அவர், இனிப்பில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். பிறகு, டில்லியில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மீண்டும் என்னை பலாத்காரம் செய்ததோடு, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினார். இரண்டரை ஆண்டுகளாக, ஜம்முவுக்கு என்னை அழைத்துச் சென்று மிரட்டி, பலாத்காரம் செய்தார். இவ்வாறு அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பலாத்காரம், பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிந்து, அந்த பிரபலத்தை கைது செய்தனர். சிறையில் 9 மாதங்களாக இருக்கும் அவருக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு, இடைக்கால ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது. அப்போது டில்லி போலீசாருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி, மிகக் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர். அதன் விபரம்: எந்த அடிப்படையில் 376வது பிரிவின் கீழ் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது? ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது. பாதிக்கப்பட்டவர் குழந்தையல்ல; 40 வயது பெண். இருவரும் ஒன்றாக ஜம்மு சென்ற நிலையில், எதற்காக, பலாத்கார பிரிவில் வழக்கு? மனுதாரருடன், இந்த பெண், ஏழு முறை ஜம்மு சென்றிருக்கிறார்; பெண்ணின் கணவருக்கும் அதுபற்றி எந்த கவலையும் இல்லை. ஒன்பது மாதங்களாக சிறையில் இருந்தும் இன்னமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இது, இடைக்கால ஜாமின் வழங்க தகுதியான வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவரை, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். ஜாமினை, அவர் தவறாக பயன்படுத்தக் கூடாது; அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சிக்க கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.