
புதுடெல்லி: ஜூன் 11-
2034-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டமாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவதாகும். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பதே இந்தத் திட்டமாகும். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா, மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
பி.பி.சவுத்ரி கூறும்போது, “வரும் 2034-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துகளைக் கேட்க முடிவு செய்துள்ளோம்.
2027-ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல்கள் குறுகிய கால ஏற்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக 2032-ல் ஒரு மாநிலத்துக்கோ, யூனியன் பிரதேசத்துக்கோ சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால் அந்தப் பேரவை 2 ஆண்டுகள் மட்டும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.. ஏனெனில் வரும் 2034-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது” என்றார்.இந்நிலையில் பி.பி. சவுத்ரியின் பேச்சு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினர் சென்று ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.