
புதுடில்லி: ஜூன் 20 –
மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ”கச்சா எண்ணெய் விலையில் எந்த பிரச்னையும் இல்லை. நிலையானவை, கட்டுக்குள் இருக்கிறது” என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலைகள் உயரக்கூடும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளன. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, விலை 100 டாலர் தாண்டுமோ என்று மக்கள் கவலைப்பட்டனர்.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்.அது இப்போது நடக்கவில்லை. ஹவுத்தி படையினர் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியபோது அது நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.