சென்னை: டிசம்பர் 2 –
டிட்வா புயல் வலு குறைந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையை டிட்வா புயல் புரட்டிப் போட்ட நிலையில் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இது சென்னையை நெருங்கிய நிலையில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தபோது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பிடும்படியாக மழை இல்லை.
நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து, நேற்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எதிர்பாராத மழை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில், குழந்தைகளும், பெற்றோரும், பள்ளிகளுக்கு நேற்று நனைந்தபடி சென்றனர். மாலை வீடு திரும்பும்போதும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், குழந்தைகள் சிரமப்பட்டனர்.
இதற்கிடையே, காலை முதலே விடாமல் மழை பெய்ததால், சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தையை ஒட்டியுள்ள மெட்ரோ வழித்தட சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகள், சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை, ரிப்பன் மாளிகையை ஒட்டி உள்ள ராஜா முத்தையா சாலை, பெரம்பூர் ஜிகேஎம் காலனி செல்லும் சாலை, புளியந்தோப்பு – பட்டாளம் பகுதி, தரமணி எம்ஜிஆர் சாலை, புறநகர் பகுதிகளான ஆவடி சென்னீர் குப்பம் சாலை, வேலப்பன் சாவடி சாலை என பல்வேறு பிரதான சாலைகளிலும் அதிக அளவில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.















