கருணாநிதி பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்

சென்னை: ஜூன் 3 –
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட திமுக பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானமாக முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடுதல், வயது முதிர்ந்த 5 தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்குதல், செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளும் பிரமாண்டமாக அரங்கேறுகின்றன.
2004-ம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் தமிழை செம்மொழியாக அறிவித்து அந்த மொழிக்கு மகுடம் சூட்டினார். இதற்கு முழு காரணம் முதல்வராக இருந்த கருணாநிதிதான். இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளில் ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.