
கொச்சி, ஜூன் 21- ‘’மாநில கவர்னரின் அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விளக்கும் உள்ளடக்கம் பள்ளிப் பாடப்புத்தகங்களில் விரைவில் சேர்க்கப்படும்,’’ என, கேரள அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார். கடந்த ஜூன் 4ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், பாரத மாதா கையில் காவிக்கொடி ஏந்தியிருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற மாநில அமைச்சர் பிரசாத், இது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பயன்படுத்தும் கொடி என எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியேறினார். இது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இந்த சூழலில், நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் நடந்த சாரண – சாரணியருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிலும், மீண்டும் பாரத மாதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அமைச்சர் சிவன்குட்டி வெளியேறினார்.
வேண்டுமென்றே, ஆர்.எஸ்.எஸ்., பயன்படுத்தும் பாரத மாதா படத்தை அரசு விழாவில் கவர்னர் வைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் நேற்று, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்ட அறிக்கை: சமீபகாலமாக, கவர்னர்களை தவறாக பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்திஉள்ளது. இந்த விஷயத்தை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவுவதில், பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.