புதுடெல்லி: செப். 4:-
‘காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபர், புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால், சிறை தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபில், காசோலை மோசடி வழக்கில் புகார் தெரிவித்த நபருக்கும் காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கும் இடையே சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த சமரச ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கான தண்டனையை உறுதி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் விபரம்:காசோலை மோசடி என்பது சிவில் குற்றம். இதில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே பேச்சு நடத்தி சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்பை சட்டம் வழங்குகிறது.
எனவே, வழக்கு போடுவதற்கு முன் அல்லது பின், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு குற்றத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அந்த முடிவை நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும்.
மேலும், சமரச முயற்சியில் எட்டப்படும் முடிவுகளின் மீது நீதிமன்றங்கள் தங்கள் சொந்த விருப்பத்தை திணிக்க முடியாது. புகார்தாரர் மற்றும் எதிர் தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு கையெழுத்திடப்பட்ட பின், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.















