
புதுடெல்லி, ஜூன் 5-
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுவதை ஒட்டி, ‘சுற்றுப்புற சூழலில் அக்கறை கொள்வதில் இருந்து எது நம்மை தடுக்கிறது?’ என்ற தலைப்பில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்ட செய்தி இது… “அனைத்து வளர்ச்சியின் நோக்கமும் வாழ்வை ஆதரிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவுமாக தான் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது கட்டாயம் தான், ஆனால் ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு அதை அணுகும்போது அது பேரழிவு ஆகிறது. உயிர்களை அதன் அனைத்து வடிவங்களிலும் மதிக்காத வளர்ச்சி வளர்ச்சியாகவே இருக்க முடியாது.
வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் இயற்கையை பற்றிய அக்கறையும் கருணையும் இருந்தால் மட்டுமே அது அனைத்தையும் உள்ளடக்கிய முழு வடிவமாகத் திகழும். வரலாற்று ரீதியாகவே, இயற்கையை போற்றுவதென்பது நம் பண்டைய கலாச்சாரங்களில் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. நம்மில் இருந்து இயற்கை எப்பொழுதுமே பிரித்து பார்க்கப்படவில்லை. ஆறுகள், மலைகள் மரங்கள், காற்று, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை நம்மோடு தொடர்புடையவை எனும் ஆழமான எண்ணத்தால் போற்றப்பட்டிருக்கின்றன. எப்போது பயபக்தி தொலைந்ததோ அப்போது சுரண்டல் ஆரம்பமாகி விட்டது. யதார்த்தத்தில், மனிதனுடைய பேராசையே இந்த பூமிக்கு மிக பெரும் தீங்கிழைக்கிறது. பேராசையானது சுற்றுச்சூழலை பற்றிய உணர்வற்ற தன்மையையே மனிதனுக்கு வழங்கியிருக்கிறது. எப்போது ஒருவர் பேராசையின் தாக்கத்தால், குறுகிய கால ஆதாயங்கள் பெறுகிறாரோ, அப்போது உயிரினங்களின் வாழ்க்கை சூழலை பாதுகாப்பது என்பது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எந்த மனது பேராசையால் ஆட்கொள்ளப்பட்டதோ, அது அதன் வாழ்வோடும் பூமியோடும் உள்ள தொடர்பை இழக்கிறது. பேராசை, உணர்வின்மை,
அதிகப்படியான நுகர்வுத் தன்மை போன்றவையே எங்கும் பரந்திருக்கும் சுற்றுசூழல் சீரழிவுக்கான வேர்களாகும். இந்த நிலையில் இருந்து வெளிவர நம்மை நம்முள் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் மற்றும் வன்முறை நிரம்பியுள்ள சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி என்பது இருக்காது. மன அழுத்தம், பதற்றம், பாரபட்சம் நிரம்பியிருக்கும் ஒரு மனது சுற்றுச்சூழலை கண்டிப்பாக கவனிக்க முடியாது.