
அகமதாபாத்:ஜூன் 14- மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்த தனது தாய் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் விமான விபத்தில் காணாமல் போனதையடுத்து அவரது மகன் அவர்களை தேடி வருகிறார்.
ஷர்லாபென் தாக்குர் என்பவர் அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று உணவு கொடுப்பதற்காக அவரும் அவரது 2 வயது பேத்தியும் மருத்துவ மாணவர் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென விமானம் அந்த கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது மகன் தனது தாய் மற்றும் 2 வயது மகளை தேடி வருகிறார். இடிபாடுகளுக்கு இடையில் அடியில் புதைந்துள்ள உடல்களை போலீஸார் தேடி வரும் நிலையில் ஷர்லாபென் தாக்குரும், அவரது பேத்தி ஆதியாவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஷர்லாபென் தாக்குரின் மகன் ரவி கூறுகையில், “ விடுதிக்கு சென்ற எனது அம்மாவும், மகளும் திரும்பிவரவில்லை. நேற்று முதல் தேடி வருகிறேன். டிஎன்ஏ மாதிரியை கொடுத்துவிட்டேன். அவர்களின் உடல் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.