
புதுடெல்லி: நவம்பர் 20-
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே உள்ள ஒரு சிக்னலில் கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அந்தக் காரை ஓட்டி வந்த மருத்துவர் உமர் நபியும் உயிரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உமர் நபி உட்பட ஹரியானாவில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பல மருத்துவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் முஜம்மில் ஷகீல், ஷாகின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு முன்பு அந்தக் கார் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் மூலம் அதிகாரிகள் கண்டறிந்தனர். டெல்லியின் சுனேரி மசூதி அருகே 10-ம் தேதி மாலை 3.19 மணிக்கு அந்தக் கார் வந்து நின்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. பின்னர் அந்தக் கார் 6.28 வரை (3 மணி நேரம்) அங்கேயே நின்றுள்ளது. அதேநேரம் அந்தக் காரிலிருந்த உமர் நபி ஒரு முறைகூட வெளியில் வரவில்லை. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட அந்தக் கார் 6.52 மணிக்கு வெடித்துச் சிதறி உள்ளது.
வாகன நிறுத்தத்தில் காரில் இருந்தபடியே (3 மணி நேரத்தில்) உமர் நபி வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்ற அவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சிக்னலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


















