கார் வெடிப்பை நிகழ்த்தியவர் இவர் தான்

புதுடெல்லி: நவம்பர் 11-
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம்? என்று கருதப்படும் நிலையில் ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டி சென்றவரின் போட்டோ வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில் தான் நேற்று மாலை 6.52 மணிக்கு டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே மெதுவாக சென்ற கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அருகே நின்ற 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் வந்தவர்கள் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கார் வெடிப்பின் பின்னணி குறித்து அரசு, போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர், “நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை நடத்துவோம்.” என்றார். பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா (Unlawful Activities (Prevention) Act) 16, 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் கார் வெடித்த இடத்தை சுற்றிய கண்காணிப்பு கேமராக்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முதற்கட்ட விசாரணையில் ஹூண்டாய் ஐ20 கார் தான் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கார் செங்கோட்டையின் அருகே சுனேஹ்ரி மசூதி அருகே 3 நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு கார் பிற்பகல் 3.19 மணிக்கு வந்து மாலை 6.48 மணிக்கு புறப்பட்டுள்ளது. இது சிசிடிவி கேமரா காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6.48 மணிக்கு அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. மேலும் அந்த கேமராவில் காரின் டிரைவரின் முகம் தெளிவாக தெரிகிறது. அதன்பிறகு முகமூடி அணிந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதுமட்டுமின்றி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கார் முகமது சல்மான் என்பவரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. ஹரியானா பதிவெண்ணில் வாங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு அவர் விற்பனை செய்துள்ளது. இந்த கார் பல்வேறு நபர்களின் கைகளுக்கு மாறி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த நதீம் என்பவருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு தொடர்ந்து மாறி உள்ளது. கடைசியாக உமர் முகமது என்பவரிடம் உள்ளது தெரியவந்துள்ளது. கார் கைமாறியவர்களின் செல்போன்களை தொடர்பு கொண்டால் அது அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.