காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ டெல்லி மக்களின் வாழ்க்கை

டெல்லி, நவ. 21:
டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் மட்டுமல்ல… அதோடு பழகிப்போன ஓர் இருள் சூழ்ந்த மனநிலையும் கூட. சில நிமிடங்களுக்கு வீட்டுக்கு வெளியே நின்றால் ஒருவேளை சாம்பலின் சுவையை நீங்கள் உணரலாம். பனி மூட்டத்தினுள் ‘வாக்கிங்’கோ, ‘ஜாகிங்’கோ சென்றால் சுவாசிக்க முடியாமல் நீங்கள் மூர்ச்சையாகலாம். அந்த அளவுக்கு டெல்லியின் நீல வானம் சாம்பல் நிறமாகவும், புகை மூட்டம் கனத்த போர்வை போலவும் நகரைச் சூழ்ந்துள்ளது. இந்தச் சூழலுக்கு காற்றின் தரத்தை கடுமை, அபாயம், நச்சு எனத் தலைப்பிட்டு செய்திகள் மேலும் அச்சத்தைக் கூட்டுவதை கவனிக்கலாம்.
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து டெல்லி அரசு பரசீலித்து வருகிறது. ஏற்கெனவே தலைநகரில் ‘கிராப் – 4’ திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன. ‘எங்களது முன் அனுமதியின்றி GRAP-4-இன் கீழ் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளது. வாகனங்களில் இருந்து வரும் புகை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் டெல்லி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நேர மாற்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லியில் காற்றின் தரம் 1,200 மற்றும் 1,500 என்ற நிலையை எட்டியதாக பல்வேறு தனியார் கண்காணிப்பு மையங்கள் அறிவித்திருந்தன. மனிதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு என்பது ‘100’ என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தர அளவீடுகள் ‘பார்டிகுலேட் மேட்டர்ஸ்’ (PM 2, PM 10) எனப்படும் காற்றிலுள்ள நுண்துகளின் அளவை வைத்து மதிப்பிடப்படுகின்றன. இந்த நுண்துகள்கள் நமது நுரையீரலுக்குள் சென்று பல்வேறு சுவாச பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.காற்றின் தரம் அபாயகரமாக இருப்பதால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு வீட்டில் இருப்பது சாத்தியமாகலாம். ஆனால் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோக வேலை செய்வோர் போன்ற எளிய தொழிலாளர்களுக்கு இது அசாத்தியம். அவர்கள் இருமிக் கொண்டே புகைமூட்டத்துக்குள் தங்களின் வேலைகளைத் தொடர்கின்றனர்.காற்று மாசு எவ்வாறு உடல்நலனை பாதிக்கிறது, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து டெல்லிவாசிகள் ஆண்டுதோறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.