குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு

புதுடெல்லி: ஜூன் 25 நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்றும் உலக நாடுகளில் இது தொடர்பாக கடைபிடிக்கப்படும் முறைகளை ஆய்வு செய்து சிறந்தது எது என்றும் பரிந்துரை செய்யும்.
இந்த கணக்கெடுப்பு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுத்துவதால் குடும்ப வருமானம் மீது ஏற்படும் தாக்கத்தையும் அறிந்து கொள்ள முயலும்.இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் முறை ஆகும். வருவாய் பகிர்வு எப்படி உள்ளது மற்றும் நலத்திட்டங்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை வகுக்க இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டு நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக குடும்ப வருமானம் குறித்த தகவல்களை சோதனை முறையில் சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.