
சென்னை: ஜூன் 13-
நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் மட்டும் சராசரியாக5.48 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பு தென்மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது, பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்சியாக மட்டுமே உள்ளது. எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


















