
புதுடெல்லி: ஜூன் 11 –
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நாடு முழுவதும் மீண்டும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தினமும் பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6815 ஆக உள்ளது. வெகு விரைவில் இது 7000த்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. 324 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
டில்லி, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் தான் அதிக தொற்றாளர்கள் உள்ளனர். அங்கு 2053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96 பேர் புதிய தொற்றாளர்கள்.
அதற்கு அடுத்தபடியாக குஜராத்(1109), மேற்கு வங்கம்(747), மஹாராஷ்டிரா(613), டில்லி(691),கர்நாடகா(559) பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டில்லி, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண். 3 பேரும் இணைநோய்களுக்கு ஆளானவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மற்றும் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பயன்படுத்துவது நலம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.