
கொல்கத்தா: ஜூன் 29 –
கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் காதலை ஏற்க மறுத்த 24 வயது மாணவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்தார். இதில் 4 பேர் கைதாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இவரது கட்சியில் மாணவர் பிரிவு உள்ளது.
அதன் பெயர் திரிணாமுல் காங்கிரஸ் சத்ரரா பரிஷத் . இந்த பரிஷத்தின் கொல்கத்தா தெற்கு மாவட்டத்தின் பொதுச்செயலாளராக உள்ள 31 வயது இளைஞர் மனோஜித் மிஸ்ரா, கொல்கத்தாவில் தான் படித்த கல்லூரிக்குள் நுழைந்து 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மனோஜித் மிஸ்ரா அந்த மாணவியை காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்காததால் அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பரான முதலாமாண்டு மாணவர் ஜாயிப் அகமது (19) , 20 வயது நிரம்பிய பிரமித் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டக்கல்லூரிக்குள் நுழைந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மருத்துவ பரிசோதனையின் ரிப்போர்ட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மாணவியின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் உள்ளன. சிராய்ப்பு காயங்கள் இருக்கின்றன. மாணவியை மனோஜித் மிஸ்ரா வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். அவரை தாக்கி உள்ளார். பல இடங்களில் கடித்துள்ளார். நகக்கீறல்கள் உள்ளன. பிடியில் இருந்து தப்பிக்க மாணவி முயன்றபோது காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.