சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி செலவு செய்த பாஜக

டெல்லி, ஜூன் 24- கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமைகளை பேசி வருவதாக பாஜகவினர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533.59 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத வளர்ச்சி ரூ.230.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. அதேபோல் மற்ற 5 இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ரூ.13.41 கோடி செலவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது.