சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தும்

கேம்பிரிஜ்: ஜூன் 20-
சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல் குறித்து விரிவாக பார்ப்போம்.
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலும் டிஜிட்டல் பயனர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான விடையை அறிவது ஏஐ திறன் கொண்ட பாட்களிடம் தான். ‘சந்தையில் விற்பனையாகும் பைக்குகளில் ‘சிறந்த சிசி’ திறன் கொண்ட பைக் முதல் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் வரை’ என அனைத்து சந்தேகங்களுக்கும் நாடுவது ஏஐ துணையைதான்.
ஒரு பக்கம் மென்பொருள் நிறுவனங்கள் ஏஐ வரவு காரணமாக ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மறுபக்கம் சாமானிய மக்கள் கூட தங்களது அன்றாட வாழ்வில் ஏஐ உதவியை நாடும் நிலை உள்ளது. தனிமையில் தவிக்கும் நபர் ஒருவர் ஏஐ உடன் ‘சேட்’ செய்யும் சம்பவங்களும் கூட அரங்கேறுவது உண்டு.
இந்நிலையில் தான் ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக எம்ஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இடத்தில் இது அதிகம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக 18 முதல் 39 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளது எம்ஐடி குழு. மொத்தம் 54 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். மூன்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். அவர்கள் எல்லோரிடமும் எஸ்ஏடி பாணியில் கட்டுரை எழுதுமாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஏஐ சாட்பாட், கூகுள் சேர்ச் அல்லது எதுவும் இல்லாமல் சுயமாக எழுதலாம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், எலக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG) மூலம் ஆய்வில் பங்கேற்றவர்கள் மூளைச் செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். குறிப்பாக கட்டுரை எழுதுபவர்களின் அறிவாற்றல் ஈடுபாட்டை மதிப்பிடுவதற்காக மூளையில் உள்ள 32 வெவ்வேறு பகுதிகளை ஸ்கேன் செய்தனர்.