சிறுத்தை வாயிலிருந்து பெண் சடலம் மீட்பு நெலமங்கலாவில் சினிமா போல் பரபரப்பு சம்பவம்

பெங்களூரு, நவ. 18: நெலமங்களா தாலுகாவில் உள்ள சிவகங்கை மலை அடிவாரத்தில் உள்ள கம்பலு கொல்லர்ஹட்டியில் சிறுத்தை தாக்கியதில் விவசாயி பெண் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் உடலை எடுத்து வரும்போது, உடலை இழுத்து செல்ல சிறுத்தை முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லர்ஹட்டியைச் சேர்ந்த கரியம்மா (வயது 55) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க தோட்டத்துக்குச் சென்ற பெண்ணை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.
பெண்ணின் உடலைத் தாக்கிய சிறுத்தை தலையை தின்றுவிட்டதால் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சடலம் நெலமங்களா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக சடலத்தை கிராமத்திற்கு காவல்துறை மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்தப்போது, சிறுத்தை சடலத்தை இழுத்து செல்ல முயன்றது. உடனே அங்கிருந்தவர்கள் தடி, கத்தி, டார்ச் ஆகியவற்றை பயன்படுத்தி சிறுத்தை வாயிலிருந்து சடலத்தை மீட்டனர். இந்த கொடூர சம்பவம் சினிமா பாணியில் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் கவலையடைந்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தலைமுறை தலைமுறையாக இங்கு வசிக்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. வனக் காவலர்கள் யாரும் இங்கு வருவதில்லை. மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது தாக்குதல் நடந்தால் மட்டுமே அவர்கள் வந்து செல்கின்றனர். இதுவரை எந்த தீர்வு வழங்கப்படவில்லை. எனவே, டிஎப்ஓ, மற்றும் ஆர்எப்ஓ, ஆகியோர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து டபாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்ற‌னர்.