சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை

சென்னை: நவ. 12:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டால் சென்னை மக்களுக்கு மழை குறித்த அச்சம் எழுந்துவிடும். இந்த ஆண்டும் அதே அச்சம் தற்போது எழுந்திருக்கிறது. அதாவது கடந்த 10ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று காலை வரை அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்குவதற்கான அறிகுறியாகும். எதிர்பார்த்தபடி, நேற்று மாலை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டது. எனவே இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு நோக்கி நகர தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் 4 மி.மீ, மாதாவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.