புதுடெல்லி: செப். 17-
பல நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளின் முழுப் பலனையும் செப்டம்பர் 22 முதல் நுகர்வோருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன. பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மதர் டெய்ரி, நேற்று, மில்க் ஷேக்குகள் முதல் பன்னீர் வரை, ஜாம்கள் முதல் சஃபால் பிராண்டின் உறைந்த பொருட்கள் வரை தங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்தது.
மதர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் மனிஷ் பன்ட்லிஷ் கூறுகையில், “பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் அண்மையில் ஏற்பட்ட ஜிஎஸ்டி குறைப்பு ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். இது நுகர்வை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் பாதுகாப்பான, உயர்தர பேக்கேஜ் செய்யப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்தும். நுகர்வோர் மையமாக செயல்படும் நாங்கள், இந்த வரிச் சலுகையை 100 சதவீதம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்,” என்றார். இதன்படி, 200 கிராம் பன்னீர் பாக்கெட் விலை ₹95-ல் இருந்து ₹92 ஆகக் குறையும். 400 கிராம் பன்னீரின் விலை ₹180-ல் இருந்து ₹174 ஆகக் குறையும். முன்பு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர் இப்போது ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி – விலை குறையும் பொருட்கள் இதேபோல், 180 மில்லி மில்க் ஷேக் பாக்கெட்டுகள் ₹30-க்கு பதிலாக ₹28-க்கு விற்கப்படும். 500 கிராம் மற்றும் 100 கிராம் வெண்ணெய் விலைகள் முறையே ₹305 மற்றும் ₹62-ல் இருந்து ₹285 மற்றும் ₹58 ஆகக் குறையும். 180 கிராம் சீஸ் கியூப்ஸ் பாக்கெட் விலை ₹145-ல் இருந்து ₹135 ஆகக் குறையும்.
கூடுதலாக, 200 கிராம் தக்காளி ப்யூரி பாக்கெட்டுகள் ₹27-ல் இருந்து ₹25 ஆகவும், 400 கிராம் ஊறுகாய் பாக்கெட்டுகள் ₹130-ல் இருந்து ₹120 ஆகவும் விற்கப்படும். இந்த பொருட்கள் முன்பு 12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்து இப்போது 5 சதவீத வரம்புக்கு மாற்றப்பட்டுள்ளன.















