வாஷிங்டன், நவ. 8- தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தனக்கு பதிலாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் செல்வார் என்று அவர் அறிவித்து இருந்தார். ஆனால் டிரம்ப் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். தென்ஆப்பிரிக்கா நடத்தும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்காவில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளும் தங்களின் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்ள ஒரு கூட்டமைப்பு தான் ஜி20. இதில் மொத்தம் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன. இந்த ஜி 20 கூட்டமைப்பில் நம் நாடும் உள்ளது. நம் நாட்டுடன் சேர்ந்து அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை உள்ளன. இந்த 20 நாடுகள் உலகத்தின் மொத்த ஜிடிபியில் 80 சதவீதம் வரை பங்களிப்பு செய்கின்றன. இதனால் ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் அதிக கவனம் பெறும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாட்டை தென்ஆப்பிரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாடு, முதல் முறையாக ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

















