Home மாவட்டங்கள் பெங்களூர் டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் உலகத் தமிழ் நாள் கோலாகல கொண்டாட்டம்

டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் உலகத் தமிழ் நாள் கோலாகல கொண்டாட்டம்

பெங்களூரு, மே 1- பெங்களூரில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழ் நாள், தமிழ் வாரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பா.சு.மணி நூலகம், தமிழ் அங்காடி, பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றம், தமிழ் அறக்கட்டளை அறக்கட்டளை பெங்களூரு ஆகிய அமைப்புகளின் சார்பில் பெங்களூரு, குயின்ஸ் சாலையில் தினச்சுடர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள பா.சு.மணி நூலகத்தில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழ் நாள் மற்றும் தமிழ் வாரவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஏப்.29ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் லிட்டில்பிளவர் உயர்நிலைப்பள்ளியின் செயலாளர் அ.மதுசூதனபாபு, உலகத் தமிழ் நாள் மற்றும் தமிழ் வாரவிழாவை தொடக்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் உலகத் தமிழ்க்கழகத்தின் ப.அரசு, பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, கவிஞர் மா.வித்யா, பா.சு.மணி நூலக வழிகாட்டுதல் குழுத்தலைவர் பெ.சங்கரதாஸ், பா.சு.மணி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைப்பாற்றல் மையத்தின் வழிகாட்டுதல் குழுத்தலைவர் மு.ரகுராமன், ஆசிரியர்கள் அருள் இசபெல்லா, டெய்சி ராணி, கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முத்துமணி நன்னன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசியஅ.மதுசூதனபாபு,”புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தனது கவிதை வழியாக சமத்துவ சிந்தனைகளை பரப்பி வந்தார். அவரது சிந்தனைகள் இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. எனவே, பாரதிதாசனின் இலக்கியங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக, உலகத் தமிழ் நாள் மற்றும் தமிழ் வாரவிழா கொண்டாடுவது சாபப்பொருத்தமானதாகும்.” என்றார் அவர். இதைத் தொடர்ந்து, தமிழ்வாரவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடந்த இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் ஒன்இந்தியா தமிழ் இணைய இதழின் ஆசிரியர் வீரக்குமாரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘மாமிகு பாதைகளே’ என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தவிழாவில் பா.சு.மணி நூலக வழிகாட்டுதல் குழுத்தலைவர் பெ.சங்கரதாஸ், பா.சு.மணி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைப்பாற்றல் மையத்தின் வழிகாட்டுதல் குழுத்தலைவர் மு.ரகுராமன், பழனிசாமி, டெய்சி ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியர் டெய்சிராணி, பாரதிதாசனின் பாடல்களை பாடினார். நிகழ்ச்சியில் பேசிய ்குமாரன்,”சித்திரச்சோலைகளே என்ற பாரதிதாசனின் பாடலில் தொழிலாளர்களின் உழைப்பை விவரிக்கும்போது ‘மாமிகு பாதைகளே’ என்ற வரியை குறிப்பிடுகிறார்.ஐம்புலங்களை அடக்கிக்கொண்டு மனிதகுழலத்தின் நலன்பேண தொழிலாளர்கள் உழைப்பதை தனது பாடலின் வழியாக பாரதிதாசன் விளக்குகிறார். தொழிலாளர்கள் இல்லாமல், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் எந்த பொருட்களையும் காண முடியாது. தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் பொருட்களை அனுபவிக்கும் நாம், அவர்களின் மேன்மையை உணர்ந்து நன்றிப் பாராட்ட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் நவீன தொழில்நுட்பங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அது தவிர்க்கமுடியாதது. செயற்கை நுண்ணறிவை அளவோடு பயன்படுத்தினால், அது நமக்கு பயனுள்ளதாக அமையும். அதிலேயே மூழ்கிகிடந்தால், அது நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, ஐம்புலங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.” என்றார் அவர். மே 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ள தமிழ்வாரவிழாவில் மே 1ஆம் தேதி தாய்மொழிகூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், மே 2ஆம் தேதி புலவர் மா.கார்த்தியாயினி, மே 3ஆம் தேதி விண்வெளி அறிவியல் அறிஞர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை, மே 4ஆம் தேதி கவிஞர் ஹரீஷ் சின்னராஜன், மே 5ஆம் தேதி கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபு உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பா.சு.மணி நூலகத்தில் தினமும் மாலை 5 மணிக்கு நடக்கவிருக்கிறது.