
சென்னை: ஜூன் 3-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உடன் இணைந்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
டாஸ்மாக் தொடர்பான சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையுடன் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்கிய இந்த உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி ஆலோசனை கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களான கோவில்களுக்கு அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் இரண்டு வார காலத்திற்குள் முற்றிலும் மூடப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பு வெளியாகிப் பல நாட்கள் கடந்த நிலையிலும், இன்னும் 717 கடைகளும் முழுமையாக மூடப்படவில்லை என்பது வெளிவந்துள்ளது. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, அறிவிக்கப்பட்ட கடைகளில் இன்னும் 212 டாஸ்மாக் கடைகள் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன. . இந்த 212 கடைகளையும் மூடுவதில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு என்னென்ன மாதிரியான நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் நிலவுகிறது என்பது குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த எஞ்சிய கடைகளையும் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக மூடுவதற்குத் தேவையான கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் பாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நுகர்வோர்களிடம் பாட்டிலுக்கு தலா 10 ரூபாய் வழங்கும் காலிப் பாட்டில் திட்டத்தில் தொடர்ந்து பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. காலிப் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சூழலுக்கு ஏற்ப அவர்களுக்கான மாற்று வழிகள் மற்றும் புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் முறைப்படி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் விவகாரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்குவது குறித்தும், கடைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கான மாற்றுப் பணி ஒதுக்கீடுகள் குறித்தும் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


















