
புளோரிடா: ஜூன் 27-
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், டிராகன் விண்கலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இணைந்தது. டிராகன் விண்கலத்தில் வந்த ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களையும், சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வரும் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். குளிர்பான பாக்கெட்களை வழங்கினர்.
டிராகன் குழுவினர் இன்று முதல் 2 வார காலத்துக்கு அங்கு தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். உணவு தானியங்கள், பாசிகளை வளர்த்தல், நுண்ணிய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மின்னணு கருவிகள் மூலம் மனிதர்கள் உரையாடுவது, விண்வெளி சூழலில் ஊட்டச்சத்து, தாவரங்களின் பாரம்பரிய பண்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது உட்பட மொத்தம் 60 ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதன்பிறகு, டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
‘குழந்தைபோல குதூகலிக்கிறேன்’: விண்வெளி பயண அனுபவம் குறித்து இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா கூறியதாவது:
பூமியில் இருந்து விண்வெளி நோக்கிய விரைவு பயணம் அருமையாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி வழியாக தெரியும் காட்சிகளை வெகுவாக ரசித்தேன். விண்வெளி பயணத்தின்போது நான் நன்கு தூங்கியதாக சக வீரர்கள் கூறினர்.
புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பயணம் தொடங்கியதும், இருக்கையில் இருந்து பின்நோக்கி சென்றதுபோல இருந்தது. விண்வெளியில் நுழைந்ததும் திடீரென அமைதி நிலவி, ஒன்றுமே இல்லாததுபோல இருந்தது. சீட் பெல்ட்டை அகற்றியதும் வெற்றிடத்தில் மிதந்தோம். முதலில் சற்று நிலைதடுமாறுவதுபோல உணர்ந்தேன். நேரம் ஆகஆக, வெற்றிடத்தில் எப்படி அடி எடுத்து வைப்பது, நடப்பது, சாப்பிடுவது என கற்றுக்
கொண்டுள்ளேன். இது அருமையான அனுபவம்.
புதிய சூழல், புதிய சவால். இதை எல்லாம் பார்த்து ஒரு குழந்தைபோல குதூகலிக்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.