புதுடெல்லி: நவம்பர் 12- டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 5 ஆண்களைச் சேர்ந்த 5 குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கலைந்து போய்விட்டது. இறந்தவர்களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்கஜ் சைனியும்(22) ஒருவர். இவர் சாந்தினி சவுக் பகுதியில் ஒரு பயணியை இறக்கிவிட்டு வரும்போது இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். பங்கஜ் சைனியின் தந்தை இதுகுறித்து கூறும்போது, “பயணியை இறக்கிவிட்டு பங்கஜ் தனது காரில் வரும்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை பங்கஜ்தான். அவரை இழந்து எங்களால் இருக்கவே முடியாது. இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்’’ என்றார்.
டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக இருந்த அசோக் குமார் என்பவரும் இதில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் குமாரின் உறவினர் பப்பு என்பவர் கூறும்போது, “8 பேர் கொண்ட குடும்பத்தில் இவர் மட்டுமே ஊதியம் ஈட்டுகிறார். இனி அந்தக் குடும்பத்துக்கு யார்தான் பாதுகாப்பு? தனது குடும்ப பாரத்தை தனியாக சுமந்தவர் அசோக் குமார். இவரது தாயார் சோம்வதி, தனது மூத்த மகனுடன் சொந்த ஊரில் வசிக்கிறார். ஊதியம் போதாததால் இரவு நேரத்தில் செக்யூரிட்டியாகவும் பணியாற்றி வந்தார் அசோக் குமார். அவர்களது எதிர்காலம் இனி கேள்விக்குறிதான்’’ என்றார்.
22 வயதான நோமன் என்பவரும் இந்த குண்டுவெடிப்பில் தனது உயிரை பறிகொடுத்துள்ளார். இவர் சாந்தினி சவுக் பகுதியில் அழகு சாதனப் பொருட்களை தனது கடைக்காக வாங்க வந்தபோதுதான் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். நோமனின் மாமா ஃபர்ஹான் கூறும்போது, “நோமனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. எங்கள் மகனை இழந்துவிட்டோம். அவர் கடின உழைப்பாளி. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது செய்யவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு தைரியம் இல்லை’’ என்றார்















