
தஞ்சாவூர் ஜனவரி 16-
பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கிவரும் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.
பொங்கல் பண்டிகையான நேற்று நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு
அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாட்டு பொங்கலான இன்று மகர சங்கராந்தி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் நந்தியெம்பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், கேரட், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய்,
வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பலவகையான பழங்கள்,
பால்கோவா, ஜாங்கிரி, அதிரசம் உள்பட பல வகையான இனிப்புகள் மற்றும் பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு
அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
















