
புதுடெல்லி, ஜூன் 4- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில்,
உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து, துணைவேந்தர் கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை தமிழக அரசு கடந்த ஏப். 11 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான குட்டி என்ற வெங்கடாசலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மே 21-ம் தேதி நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடுவும், யுஜிசி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், உயர் கல்வி துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து அன்றைய தினம் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு 10 சட்டமசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டது.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சி பிரமுகரான குட்டி என்ற வெங்கடாச்சல பதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அவசர கதியில் விசாரித்து, அதுவும் நீதிமன்ற நேரம் முடிந்த பின்னரும் மாலை 6.30 மணிவரை இடைவிடாது விசாரித்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.