
புதுடில்லி: டிசம்பர் 25-
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த வாஜ்பாய்க்கு 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. லக்னோவின் புறநகரில் உள்ள ஹார்டோய் சாலையில் கோமதி நதிக்கரைக்கு அருகில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், சக்திவாய்ந்த கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















