தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி

மும்பை: டிசம்பர் 22-
மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
நகராட்சி கவுன்சில்களில் 286-ல் 245 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 3,300 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 286 நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக 264 கவுன்சில்களில் கடந்த 2-ம் தேதியும், மற்ற கவுன்சில்களில் கடந்த 20-ம்தேதியும் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக, சிவசேனா (ஷிண்டே) மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி, 286 நகராட்சி கவுன்சில்களில் 245 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
75 சதவீத நகராட்சித் தலைவர்கள் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியை சேர்ந்தவர்கள். 134 நகராட்சிகளில் பாஜக வேட்பாளர்கள் தலைவர்களாக தேர்வாகியுள்ளனர்.
சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார் அணி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி
இத்தேர்தலில் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனினும், சந்திரபூர் மாவட்டம் பிரம்மபுரி நகராட்சி கவுன்சிலில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 23 இடங்களில் 21 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
பாஜக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. சாங்லி மாவட்டம் உருண் – ஈஸ்வர்பூர் நகராட்சி கவுன்சிலில் 23 தலைவர் பதவிகளை தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி வென்றது.